.webp)

Colombo (News 1st) ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சில ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக ஊடகங்கள் மூலம் முக்கிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடும் நிலை அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கைக்கு அமைய ரயில்வே கட்டுப்பாட்டு அறைகள், எஞ்சின் கட்டுப்பாட்டு அறைகள், வேலைத்தளம் அல்லது எந்தவொரு வளாகத்திலுமிருந்து எந்த அதிகாரியும் அல்லது ஊழியரும் ரயில்வே செயற்பாடுகள், உள்ளக தீர்மானங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வௌியிடும் அதிகாரம் ரயில்வே பொது முகாமையாளர், ரயில்வே ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
