இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன்

இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் - அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிரான்ஸ்

by Rajalingam Thrisanno 15-07-2026 | 11:16 AM

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் ஸ்பெய்ன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. 

இதற்கான முதல் அரைஇறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸை  2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றிகொண்டது. போட்டியை சவாலாக ஆரம்பித்த பிரான்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்த ஸ்பெய்ன் அணி வீரர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். முதல் பாதியில் 22 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மைக்கல் ஒயாசபல் கோலடித்தார். அதன்படி முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆரம்பமாகி 58 ஆவது நிமிடத்தில் பெட்ரோ பொரோரோ கோலடிக்க ஸ்பெய்ன் அணியின் கோல் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. பிரான்ஸ் அணி வீரர்கள் கோலடிக்க கடுமையாக முயற்சித்த போதிலும் ஸ்பெய்ன் அணி வீரர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. ஸ்பெய்ன் வீரர்கள் தடுப்புச் சுவராக செயற்பட்டு பிரான்ஸ் அணித்தலைவரான எம்பாப்வேயை கட்டுப்படுத்த பிரான்ஸ் அணியால் எதனையும் செய்ய முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அணியின் வெற்றி உறுதியானது. 

இதன் மூலம் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் பிரான்ஸின் எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்தது.

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 2 தடவைகள் (1998, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரான்ஸ் 2022 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.

16 ஆண்டுகளின் பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஸ்பெய்ன் இரண்டாவது தடவையாக கால்பந்தாட்ட உலக சாம்பியன் மகுடத்தை சூடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

ஸ்பெய்ன் முதல் தடவையாக 2010 ஆம் ஆண்டில் உலக சாம்பியனானதும் குறிப்பிடத்தக்கது.