'எல்நினோ' தாக்கம் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு

'எல்நினோ' தாக்கம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு

by Staff Writer 23-06-2026 | 6:14 PM

Colombo (News 1st) 'எல்நினோ' காலநிலை தாக்கங்களால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

'எல்நினோ' நிலைமையால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, விவசாய அமைச்சர் கே.டீ.லால் காந்த, பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உபகுழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி பெயரிடப்பட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.