.webp)

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தானை மனு தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொடர்ச்சியாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தமக்கெதிராக வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளதாக சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த எழுத்தானை மனுவில் கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் தாம் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்பதை சுட்டிக்காட்டி பிரதிவாதிகள் தமக்கெதிராக இந்த வெளிநாட்டு பயணத்தடையை பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமது தனிப்பட்ட சுதந்திரம் அற்றுப்போகும் அல்லது தாம் கைது செய்யப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஸ எழுத்தானை மனுவினூடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த விசாரணைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு விசாரணை நிறுவனமும் தன்னிடம் விசாரணையோ அல்லது வாக்குமூலம் பதிவோ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளுக்கு அமைய எந்த சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் சாட்சிகள் எவரையும் தான் அறிந்திருக்கவில்லை எனவும் அந்த சாட்சிகளுக்கு எதிராக அழுத்தம் விடுக்க வேண்டிய எந்த தகுதியும் தமக்கு இல்லை எனவும் கோட்டாபய ராஜபக்ஸ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்புலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்யவோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கவோ எந்தவொரு தேவையும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் கீழ் தம்மை கைது செய்வதையோ அல்லது தடுப்புக்காவலில் வைப்பதையோ தடுக்கும் ரிட் கட்டளையை பிரதிவாதிகளுக்கு எதிராக பிறப்பிக்குமாறும் கோட்டாபய ராஜபக்ஸ நீதிமன்றில் கோரியுள்ளார்.
இந்த மனு விசாரணை செய்யப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை தம்மை கைது செய்வதையோ அல்லது தடுப்புக்காவலில் வைப்பதையோ தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
