.webp)
Colombo (News 1st) கொங்கோ குடியரசு மற்றும் உகண்டாவில் எபோலா வைரஸ் காரணமாக சுகாதார அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களில் கொங்கோ குடியரசில் எபோலா வைரஸினால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் 03 சுகாதார வலயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246 ஆக பதிவாகியுள்ளது.
கொங்கோ குடியரசின் இடுரி சுகாதார வலயத்தில் வழக்கத்திற்கு மாறான நோயாளர் கொத்தனி கண்டறியப்பட்டுள்ளதாகவும் வடக்கு கிவு பகுதியிலிருந்து பல நோயாளர்கள் உள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உகண்டா தலைநகரான கம்பாலாவில் எபோலா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 02 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கொங்கோ குடியரசிலிருந்து உகண்டாவிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பித்தக்கது.
இதனால் சர்வதேச அளவில் நோய் பரவுவதன் மூலம் ஏனைய உறுப்பு நாடுகளிலும் பொதுமக்களின் சுகாதார நிலைமை அபாயத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொற்றுநோயின் பரவலை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் வலுவான மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயற்படுத்தும் திறனை உறுதி செய்யவும் இந்நேரத்தில் சர்வதேச ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் தேவை என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
