.webp)

Colombo (News 1st) தனியார் வங்கியொன்றின் தரவு கட்டமைப்பிற்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபாவை பாரியளவில் மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மெய்நிகர் பணம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸ் நிபுணர் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக இதுவரையில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸின் லியோனில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களில் வங்கி தலைமையகத்தின் கொடுப்பனவு தீர்வை பிரிவின் உதவி முகாமையாளர் ஒருவரும் அவரது சகோதரரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDB வங்கியில் முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி சம்பவத்தில் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கு மீதிகளுக்கும் பாதிப்பில்லை என அந்த வங்கி அண்மையில் அறிக்கை ஊடாக தெரிவித்திருந்தது.
வங்கி செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதுடன் அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, NDB வங்கியின் மூலதன அளவு மற்றும் நிதி திரவத்தன்மை தொடர்பான விகிதங்கள், குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளை விட அதிக மட்டத்தில் காணப்படுவதாக மத்திய வங்கி இந்த விடயம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
