மீண்டெழும் மக்களுடன் கைக்கோர்க்கும் Care & Dare

மீண்டெழ முயற்சிக்கும் மக்களுடன் கைக்கோர்க்கும் கம்மெத்த Care & Dare திட்டம்

by Staff Writer 21-02-2026 | 1:48 PM

COLOMBO (News1st) டித்வா புயலால் பாதிக்கப்பட்ட எமது மக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கம்மெத்த Care & Dare வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று(21) முன்னெடுக்கப்படுகின்றது. 

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஊடாக முன்னெடுக்கப்பட்ட அவசர நிவாரண சேவைகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
 

அதன் அடுத்த கட்டம் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் நிலைநிறுத்துவதாகும்.

கம்மெத்த Care & Dare திட்டத்தின் நான்காவது கட்டம் இன்றும்(21), நாளையும்(22) நடைபெறவுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் கம்மெத்தவுடன் இணைந்துகொண்டனர். கம்மெத்த மீது அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினாலேயே இது சாத்தியமாகின்றது.

கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டியெழுப்புவதற்காக கம்மெத்த Care & Dare திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் மின்டெரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Care & Dare வேலைத்திட்டம் முதலில் கொத்மலையிலும் இரண்டாவதாக பசறை மடுல்சீமை மற்றும் வெலிமடையிலும் மூன்றாவது கட்டம் நில்தண்டாஹின்ன மற்றும் கம்பளையிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் இதனூடாக ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். 


கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்கள் பயனடை​யும் நோக்கில் இன்றைய தினம் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
 

உடுதும்பர சரத் ஏக்கநாயக்க ஆரம்ப வித்தியாலயத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை(22) இந்த வேலைத்திட்டம் மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை மற்றும் அம்பங்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

எம்.டி.வி / எம்.பி.சி (MTV / MBC) தெபானம ஒளிபரப்பு நிலையத்தின் பணிப்பாளர் வசந்த மாசிங்ககே தலைமையிலான கம்மெத்த குழுவினர் இன்றைய இந்தத் திட்டத்திலும் இணைந்து கொண்டனர்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன், சிரச ஊடக வலையமைப்பின் தலைவரும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் பணிப்பாளரும் கம்மெத்த தலைவருமான ஷெவான் டெனியல் மற்றும் எம்.டி.வி பிரதான நிறைவேற்று அதிகாரியும் கம்மெத்த பிரதித் தலைவருமான யசரத் கமல்சிறி உள்ளிட்ட உயர்மட்ட உயர் நிர்வாகத்தினரின் ஆசீர்வாதத்துடனேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக்க உடவத்த, உடுதும்பர பிரதேசச் செயலாளர் ஜயமிணி போகஹவத்த, உடுதும்பர சரத் ஏக்கநாயக்க மாதிரி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் டப்ளியூ.எஸ்.டப்ளியூ.எம். குணசிங்க மற்றும் உடுதும்பர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் துசித தொபகம்மன உள்ளிட்ட பலரும் இன்று கம்மெத்தவுடன் இணைந்திருந்தனர்.

மருத்துவ சேவைகள், ஆலோசனை சேவைகள், சட்ட சேவைகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதுடன், வருமான வழிகள், சுயதொழில் வாய்ப்புகளை இழந்த மக்களுக்கான விசேட ஆலோசனை சேவைகளும் இங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

அனர்த்தங்களினால் இழந்த பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வழங்குவதற்காக பிரதேச செயலகமும் நாளை கம்மெத்த Care & Dare திட்டத்தில் இணையவுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு பிள்ளைகளின் விசேட சேவைகளை வழங்குதல், உலருணவுப் பொதிகள், வீட்டுப் பொருட்கள், சுகாதாரப் பொதிகள் வழங்குதல் என்பனவும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் உள்ளடங்குகின்றன.

அனர்த்த சேவை மத்திய நிலையம், தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சுகாதார அமைச்சு, முப்படைகள், பொலிஸார் ஆகியனவும் கம்மெத்தவுடன் கைகோர்த்துள்ளன.

Care & Dare செயற்றிட்டம இந்த கட்டத்துடன் நிறைவடையவுள்ளதுடன், டித்வா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில் மக்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் பல்வேறு சமூக நலன்புரிச் சேவைகளுக்காக கம்மெத்த குழுவினர் இந்த பகுதிக்கு வருகை தந்துள்ளமையினால் மாவட்டத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த குறிப்பிட்டார்.