மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தானந்த, நலினுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

by Chandrasekaram Chandravadani 05-02-2026 | 12:43 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவை எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05) அறிவித்துள்ளது.

வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோவும் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் எழுப்பிய முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு இன்று அறிவிக்கப்படவிருந்த போதிலும், உத்தரவு இன்னும் தயாராக இல்லாமையால் மார்ச் 25ஆம் திகதி உத்தரவு அறிவிக்கப்படுமென நீதிபதி தெரிவித்தார்.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் அலுவலகங்களுக்கு வழங்குவதற்காக கெரம் போர்டுகள் மற்றும் டாம் போர்டுகளை இறக்குமதி செய்தமையின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்ட மாஅதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.