.webp)
Colombo (News 1st) முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்ஸவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார இன்று(02) உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கான எயார்பஸ் விமான கொடுக்கல் - வாங்கல் வழக்கின் 3ஆவது சந்தேகநபராக பெயரிட்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2012 - 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 10 எயார்பஸ்களை கொள்வனவு செய்வதற்கு தயாரான நிலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
சமல் ராஜபக்ஸவின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்ஸவை வழக்கின் 3ஆவது சந்தேகநபராக பெயரிடுவதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாக இதன்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வசிப்பதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுமாறு கோட்டை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
சிவப்பு அறிவித்தல் விடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
2012 - 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு உரித்தான 13 விமானங்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிதாக 14 விமானங்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
அவற்றுள் A330 ரக 06 விமானங்களையும் A350 04 விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கு பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த கொடுக்கல் - வாங்கலில் பாரிய முறைகேடு இடம்பெற்றுள்ளதாக 2020 ஜனவரி மாதம் பிரித்தானியாவின் பாரிய ஊழல் விசாரணை அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளில் தகவல்கள் வௌியாகின.
10 எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்குவதற்கு உறுதியளித்திருந்தாக இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ லங்கன் நிறுவன நிறுவனத்தின் அப்போதைய நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு உரித்தான ப்ரூனாய் நாட்டில் இயங்கிய நிறுவனமொன்றின் கணக்கிற்கு இந்த பணத்தின் 02 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகின.
பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மன்றில் விடயங்களை முன்வைத்தது.
இந்த அறிக்கையின் பிரகாரம், மனைவிக்கு உரித்தான நிறுவனத்தின் பெயரில் ப்ரூனாய் நாட்டில் நடத்திச் செல்லப்பட்ட நிறுவனத்திற்கு கிடைத்த பணம், சிங்கப்பூரிலுள்ள கணக்கினூடாக கபில சந்திரசேன, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியாவிலுள்ள தமது வங்கிக்கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு திணைக்களம், இலங்கையிலுள்ள 02 வங்கி கணக்குகளுக்கும் சிங்கப்பூரிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த 02 வங்கிக் கணக்குகளில் ஷமீந்திர ராஜபக்ஸவிற்கு உரித்தான வங்கி கணக்கிற்கு 2013ஆம் ஆண்டில் 160,000 அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஷமீந்திர ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அவர் அமெரிக்காவில் வசிப்பதால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடமும் இ
து குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது குறித்த பணிப்பாளர் சபையில் ஷமீந்திர ராஜபக்ஸ இருந்ததாகவும் அது தொடர்பான கூட்டங்கள் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று ஷமீந்திர ராஜபக்ஸவை மூன்றாவது சந்தேகநபராக பெயரிடுமாறு சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாக குற்றப் புலானய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரிவித்தது.
