.webp)

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டத்தரணிகளுக்கு இன்று(28) அறிவித்தது.
2022 மே 09ஆம் திகதி அரகலய மீது தாக்குதல் நடத்திய பின்னர் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்ட சேதங்களால் சட்டத்திற்கு முரணான வகையில் இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் அந்த இழப்பீட்டு தொகையை மீள அறவிடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 08 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டீ.விக்கிரமரத்ன, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மனுவை சூழலியல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.
