ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் - ஜனாதிபதி

by Staff Writer 15-01-2026 | 7:57 PM

Colombo (News 1st) செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு பண்டிகை மாத்திரமன்றி எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கொண்ட மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் ஒன்றாக கைகோர்த்துள்ளதாக ஜனாதிபதி தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  

அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில் தாம் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில் இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று 'வளமான நாடு - அழகான வாழ்க்கையை' கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.