வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்..

வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்..

by Staff Writer 12-01-2026 | 10:55 PM

Colombo (News 1st) இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் லியன் வருசுவிதானகேவினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக 05  இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 30 வருடங்கள் வரை விசாரணை நடைபெற்று வந்த காணி வழக்கின் தீர்ப்பிற்கு அமைய காணி உரிமை பத்திரத்தை ஒப்படைப்பதற்காக இலஞ்சம் பெற்றுள்ளதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

குறித்த இலஞ்ச தொகையை பிளாஸ்டிக் பெட்டியொன்றில் இட்டு வெலிமடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வழங்குமாறு சந்தேகநபரால் முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமது கட்சியாளருக்கு எதிரான இலஞ்ச குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.தனுஷ்க தெரிவித்தார்.

03 பிள்ளைகளின் தற்தையான சந்தேகநபருக்கு தகுதியான எந்தவொரு நிபந்தனைகள் அடிப்படையிலும் பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், பிணை வழங்குவதற்கான உரிய  விடயங்கள் ஏதும் இல்லாமையின் காரணமாக பிணை கோரிக்கையை நிராகரித்தார்.