.webp)

Colombo (News 1st) பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் அப்துல் சமட் கொலை குற்றச்சாட்டில் இன்று(16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சனிக்கிழமை பிரதேச சபை உறுப்பினரிடம் உதவி கேட்க வந்தபோது இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் அப்துல் சமட் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நேற்று(15) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் வீட்டிற்கு சென்ற பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தாக்குதலின் பின்னர் உயிரிழந்துள்ளமை விசாரரணைகளில் தெரியவந்ததையடுத்து சர்வஜன அதிகாரம் கட்சியின் லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
40 வயதான எம்.ஆர்.நைஸர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் 4 பற்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கும் நபர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
