.webp)

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட ஆஷா மினெரல் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரசிக்க அத்தப்பத்துவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று(11) பிற்பகல் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான புத்தளம் - அறுவக்காடு பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பகுதியில் பாரிய சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஆஷா மினெரல் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரசிக்க அத்தபத்து கைது செய்யப்பட்டார்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் 12 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புவிச்சரிதவியல் ஆய்வு, சுரங்க பணியகச் சட்டம், தொல்லியல் கட்டளைச் சட்டம், வன இலாகா கட்டளைச் சட்டம், வனஜீவராசிகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
