ஜனாதிபதி - IMF பிரதிநிதிகள் சந்திப்பு

ஜனாதிபதி - சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு

by Staff Writer 07-10-2025 | 6:48 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் இன்று(07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் 06ஆவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் 05ஆவது மீளாய்வின் இடைக்கால கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.

பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் இதற்காக அரசாங்கத்திடம்  மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதார மறுமலர்ச்சி அடையக்கூடிய நாடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச்செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும் அதற்காக அரசாங்கம்  முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுமலர்ச்சி இலக்கை அடைவதற்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக முதலீட்டிற்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன் எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர்.