.webp)
ஏதேனுமொரு முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்காக ஒருவரை அழைக்கும்போது முறைப்பாட்டில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குறித்த நபருக்கு தௌிவுபடுத்த வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை வழங்கும் சுற்றுநிரூபம் பதில் பொலிஸ் மாஅதிபரினால் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிரூபம் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரினால் உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி நிபுணரான விதுர ருலபனாவ என்பவரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று(04) அழைக்கப்பட்ட போதே சட்ட மாஅதிபர் மன்றுக்கு இதனை தெரியப்படுத்தினார்.
அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு இன்று(04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தாம் சமூக வலைத்தளத்தில் வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டுமென குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரினால் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் குறிப்பிட்டார்.
பின்னர் தமக்கு எதிரான முறைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்ன என்றும் பொலிஸாரிடம் தாம் வினவிய போதிலும் அதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு தகவல் வழங்க மறுப்பு தெரிவித்ததன் ஊடாக பிரதிவாதியான பொலிஸ் அதிகாரிகள் தமது அடிப்படை உரிமையை மீறியதாக தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்ட கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வழங்கிய சமர்ப்பணங்களுக்கு அமைய சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டு நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும் இதற்கமைய மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்ய முடியுமெனவும் மனுதாரர் சார்பில் ஆஜராக சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.
இதற்கமைய மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த மனுவில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர், அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.