லக்ஷ்மன் யாப்பாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff Writer 30-06-2025 | 4:46 PM

Colombo (News 1st) முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பதவிக்காலத்தின் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரங்களை வௌியிட்டமையின் ஊடாக அரசாங்கத்திற்கு 17 இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகை இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் ஜயந்த எதிரிசிங்கவிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த இருவரும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தில் 5 குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே 16ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்தது.

மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியத்திலிருந்து 2014 நவம்பர் 19ஆம் திகதி 11 பத்திரிகைகளுக்கு மேலதிகமாக அச்சிடப்பட்ட சஞ்சிகைகளுக்காக 1,748,887 ரூபா 76 சதம் நட்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியமையின் ஊடாக ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக இவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கின் சாட்சிகளாக 15 பேரை முன்னிலைப்படுத்தவும் 21 ஆவணங்களை வழக்கு சான்றுப்பொருட்களாக முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.