.webp)
Colombo (News1st) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள போர்டோ நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது ட்ருத் சமூக வலைத்தள பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க விமானங்கள் ஈரான் வான்வௌியை விட்டு வௌியேறியுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
3 அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் அமெரிக்காவினால் நடத்தப்பட்டுள்ளமையை ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென ஈரான் எச்சரிக்கை விடுத்து வரும் பின்புலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு இன்று(22) விசேட உரையாற்றவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் ஒரு சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரானின் தென் பிராந்திய நகரமான பந்தர் அப்பாஸ் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆயுதக் களஞ்சியம் மற்றும் ஆளிள்ளா விமானங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஈரானிய மோதலில் அமெரிக்காவின் தலையீடு "மிகவும் ஆபத்தானது" என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் நேற்று(21) கூறியிருந்தார்.