.webp)
Colombo (News 1st) மாதம்பை பிரதேசத்தில் சிலிக்கா மணல் அகழ்விற்காக மீண்டும் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் சுற்றாடல் ஆய்வறிக்கையை கோருவதே உகந்தது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் மாதம்பை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சுற்றாடல் நீதிக்கான மையம் மற்றும் பிரதேசவாசிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2014 முதல் மாதம்பை பகுதியிலுள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற சிலிக்கா மணல் அகழ்வு காரணமாக குறித்த பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு மீள பயன்படுத்த முடியாதவாறு அழிவடைந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேசத்தில் தெங்குச்செய்கை உள்ளிட்ட ஏனைய செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நீர்நிலைகள் வறண்டுபோகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பிரேசத்தில் மணல் அகழ்விற்காக புதிதாக அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் சுற்றாடல் ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவிந்திரநாத் தாபதே தெரிவித்தார்.
எனினும் அத்தகைய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும் மீண்டும் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கு முன்னதாக சுற்றாடல் ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்வது உகந்தது என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
இந்த மனு எதிரவரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.