மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்..

by Staff Writer 18-06-2025 | 7:24 PM

Colombo (News 1st) மூன்றாம் தரப்பினூடாக மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று(17) உத்தரவிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன, வைத்தியசாலையின் முகாமைத்துவ உதவியாளரான கெக்குலந்த லியனகே இந்திக்க மற்றும் நிமல் ரஞ்சித் முத்துகுட ஆகிய மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்றிரவு(17) கைது செய்யப்பட்டனர்.

நிமல் ரஞ்சித் முத்துகுட, விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன சட்டவிரோதமாக நடத்திச்சென்ற தனியார் நிறுவனத்தில் கடமையாற்றிய ஊழியராவார்.

⭕ நரம்பியல் சத்திரசிகிச்சைகளுக்கு தேவையான EVD மற்றும் VP SHUNT ஆகியன வருடாந்த மதிப்பீட்டில் உள்ளடக்காது வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் குறித்த வைத்தியரின் கட்டுப்பாட்டிலுள்ள வௌிநிறுவனமொன்றினூடாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை

⭕ அதனூடாக நோயாளர்களுக்கு நட்டம் ஏற்படினும் தனக்கோ அல்லது வெளிப்புறத் தரப்பினருக்கு இலாபத்தை ஈட்டுதல்

⭕ குறித்த பொருட்கள் வைத்தியசாலையின் விநியோகப்பிரிவினூடாக கோரப்படாததால் வைத்தியசாலைக்கு நட்டமேற்படுத்தியமை

ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

EVD எனப்படும் கருவி 2022ஆம் ஆண்டில் மருந்து விநியோகப்பிரிவில் 17,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதுடன் அதன் சந்தை பெறுமதி 46,500 ரூபாவாகும்.

குறித்த கருவி வைத்தியரின் பரிந்துரையின் பேரில் 120,000 ரூபா முதல் 250,000 ரூபா வரை வௌித்தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதிக்குள் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 77 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு சுமார் 3 கோடி ரூபாவென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்