.webp)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டு பணியாளரான நிபுனி கிருஷ்ணஜினா எனும் பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயசிங்க இன்று(17) பிணை உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் சமர்ப்பித்தது.
சந்தேகநபர் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
மணல் அகழ்வு தொடர்பான வர்த்தகத்திற்காக குறித்த வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டதாக சந்தேகநபர் குறிப்பிட்ட போதிலும், பணக்கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்ட விதத்தை ஆராயும் போது அவ்வாறான எந்தவொரு வர்த்தகமும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான நிஷாந்த பஸ்நாயக்கவின் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தையே சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாகவும் அது அரசாங்கத்தின் பணம் அல்லவெனவும் சந்தேகநபர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 04 சரீரப்பிணைகளில் விடுவித்து உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.