இலங்கையை வென்ற தென்கொரியா

உலகக் கிண்ண றக்பியின் ஆசிய தகுதிகாண் சுற்று - இலங்கையை வென்ற தென்கொரியா

by Rajalingam Thrisanno 13-06-2025 | 8:33 PM

Colombo (News 1st) உலகக் கிண்ண றக்பி தொடருக்கான ஆசிய வலய தகுதிகாண் சுற்றில் இலங்கை இன்று தென்கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

கொழும்பு குதிரைப்பந்தய திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் தென்கொரியாவுக்கு பலத்த சவால் விடுத்த இலங்கை அணி முதல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் தென்கொரியா ஒரு ட்ரை மூலம் புள்ளிகளைப் பெற்றதுடன் 7 நிமிடங்களின் பின்னர் இலங்கையும் ஒரு ட்ரையை பூர்த்திசெய்து சமநிலை அடைந்தது.

போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கிடைத்த பெனால்டியை அணித்தலைவர் தரிந்த ரத்வத்தே சரியாகப் பயன்படுத்தினார்.

40ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்காக பசிந்து பண்டார ட்ரையை பூர்த்திசெய்தார்.

முதல் பகுதியில் 17 க்கு 14 புள்ளிகள் என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பகுதியில் 43ஆவது நிமிடத்தில் மற்றொரு ட்ரையைப் பூர்த்திசெய்து கோலையும் போட்டது.

என்றாலும் அதன் பின்னர் இலங்கை வீரர்கள் புள்ளிகள் பெறுவதை தடுத்து விளையாடிய தென்கொரிய வீரர்கள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர்.

விறுவிறுப்பாக நீடித்த போட்டியின் இறுதியில் 38 க்கு 34 எனும் புள்ளிகள் கணக்கில் தென் கொரியா வெற்றியீட்டியது.

இலங்கை 5 ட்ரைகள், 3 கோல்கள், ஒரு பெனால்டி மூலம்  34 புள்ளிகளைப் பெற்றது.

தென் கொரியா 6 ட்ரைகள், 4 கோல்கள் மூலம் 38 புள்ளிகளை கைப்பற்றியது.

றக்பி உலகக் கிண்ண ஆசிய தகுதிகாண் சுற்றின் உத்தியோகப்பூர்வ ஊடக அனுசரணையாளராக சிரசTV மற்றும் Yes FM என்பன  விளங்குகின்றன.

இன்றைய போட்டியில் சிறந்த வீரருக்கு சிரசTV மற்றும் Yes FM வழங்கும் டஸ்கர் ஒவ் த கேம் ('TUSKER OF THE GAME') விருது இலங்கையின் லசிந்து கருணாதிலக்க வசமானது.