.webp)
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்துக்கு அருகில் நேற்று(13) பிற்பகல் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 260 ஐ கடந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
269 சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அஹமதாபாத் பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான மரபணு பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்திய அரசாங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமது நிறுவனத்திற்குரிய விமானத்திலிருந்த 241 பேர் உயிரிழந்துள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிர்த்தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக எயார் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி இந்திய ரூபா இழப்பீட்டை வழங்க அந்த விமான நிறுவனத்தின் உரிமம் பெற்ற டாட்டா குழு தீர்மானித்துள்ளது.
விமானம் விபத்திற்குள்ளாகிய இடத்தில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக 242 பேருடன் இந்தியாவின் அஹமதாபாத்திலிருந்து லண்டனின் கெட்விக் நோக்கி பயணத்தை ஆரம்பித்த Boeing 787-8 ரக விமானம் பறக்க ஆரம்பித்த ஒரு நிமிடத்திற்குள்ளேயே விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்டு 30 வினாடிகளில் விமானத்திற்குள் பாரிய சத்தம் கேட்டதாக விபத்தில் உயிர்த்தப்பிய நபர் தெரிவித்துள்ளார்.
விமானம் வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் அவசரமாக வௌியேறும் கதவினூடாக விமானத்திலிருந்து பாய்ந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.
விமானம் விபத்திற்குள்ளாகியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து எவ்வாறு ஏற்பட்டிருக்காலம் என்பது தொடர்பில் விமானப் போக்குவரத்து நிபுணர்கள் தங்களுடைய அவதானிப்புக்களை முன்வைத்துள்ளனர்.
விமானத்தின் இரட்டை எஞ்சின் செயலிழப்பு, விமானம் பறவைகளின் தாக்குதலுக்கு இலக்காகியதனூடாக அல்லது விமான இறக்கைகளிலுள்ள flaps எனப்படும் பகுதி விரிவடையாமையினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமெரிக்காவினால் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் வழங்குவதாக அந்நாட்டு ஐனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.