.webp)
Colombo (News 1st) இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இன்று(12) பிற்பகல் இடம்பெற்ற விமான விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனும் அனுமானத்திற்கு வந்துள்ளதாக குஜராத் மாநில தலைமை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விமானத்தில் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இவர்களில் 169 இந்திய பிரஜைகளும் 53 பிரித்தானியர்களும், 07 போர்த்துக்கல் பிரஜைகளும் கனேடியர் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல் வௌியாகியுள்ளது.
இன்று பிற்பகல் 1.38 அளவில் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த எயார் இன்டியா ஏஐ 171 விமானமே விபத்திற்குள்ளானது.
விமானம் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் தீப்பிடித்து வெடித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வௌியாகியுள்ளன.
அஹமதாபாத்திலிருந்து லண்டன் கெட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட இந்த விமானம் 625 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது வீழ்ந்து நொறுங்கியது.
விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த விமானத்தினால் வான் நோக்கி உயரப் பறக்க முடியவில்லை.
சில நிமிடங்களில் விமானியினால் எச்சரிக்கை தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு விடுக்கப்பட்ட போதிலும் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட பதிலுக்கு விமானியினால் எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் முன்பகுதி அஹமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் விடுதியின் கூரையின் மீது வீழ்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் டாட்டா குழுமத்திற்கு சொந்தமானதாகும்.
விமான நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் கவலை வௌியிட்டுள்ளார்.
இந்த விமான விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த 05 மருத்துவ மாணவர்கள் உட்பட 202 பேரின் சடலங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.
தேவையான அனைத்து மீட்பு பணிகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விமான விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கும் அதிகாரிகள் செயற்பட்டுவருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அஹமதாபாத் விமான விபத்து தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணித்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தமது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த சோகமான தருணத்தில் இலங்கை மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தூர சேவை விமான பயணம் என்பதால் விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமான விபத்திற்கு பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் ஆகியோர் இரங்கல் வௌியிட்டுள்ளனர். நிலைமை தொடர்பில் அதீத கவனம் செலுத்தியுள்ளதாகவும் இத்தகைய மிக மோசமான, கவலையான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் இருப்பதாகவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அஹமதாபாத் விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குஜராத்தின் அஹமதாபாத்திற்கு வடக்கே 9 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹன்சோலில் இருக்கும் பெரிய சர்வதேச விமான நிலையமான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் 7ஆவது விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் சுமார் 245 விமானங்கள் இங்கு வருகைதருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் 80க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.