.webp)
Colombo(News1st) பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் மூவரடங்கிய குழு இன்று(11) சாட்சி விசாரணையை ஆரம்பித்தது.
2023ஆம் ஆண்டு வெலிகமவிலுள்ள ஹோட்டலொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் போது உயர்திகாரிகள் தவறான பணிப்புரைகளை விடுத்ததாக மூவரடங்கிய குழு முன்னிலையில் இன்று(11) சாட்சியமளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி அன்சலாம் டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் நெவில் டி சில்வாவின் உத்தரவிற்கமைய ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டில் வெலிகம W-15 ஹோட்டல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவமே தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீ்க்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டாகும்.
பதவிக்கான அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளை அனுப்பி ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக தேஷபந்து தென்னகோன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவரும் உயிரிழந்தார்.
இன்று(11) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய விசாரணை குழு முன்னிலையில் சாட்சியமளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி அன்சலம் டி சில்வா சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார்.
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான விசாரணைக்குழுவில் சாட்சியமளிக்க இன்று(11) நால்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் துசித குமாரவும் இன்று சாட்சியமளித்தார்.