பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன விளக்கமறியலில்..

ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன விளக்கமறியலில்..

by Staff Writer 11-06-2025 | 7:47 PM

Colombo(News1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் பிரதான சூத்திரதாரியான இராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வு பெற்ற பிரகேடியர் ஷம்மி குமாரரத்ன சாட்சியாளர் ஒருவருக்கு அழுத்தம் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று(11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொட 2010 ஜனவரி 24ஆம் திகதி காணாமற்போனதுடன் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரையான விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சூத்திரதாரிகளில் பெரும்பாலானோர் அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய அதிகாரிகளாவர்.

ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, எக்னலிகொட வழக்கின் பிரதான சாட்சியாளரான சுரேஷ் குமார் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபையின் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி இன்று(11)  திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.

ஓய்வு பெற்ற பிரிகேடியரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து பல சந்தர்ப்பங்களில் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி குறித்த தொலைபேசி இலக்கத்திலிருந்து மற்றுமொரு முன்னாள் இராணுவ உறுப்பினர் விடுத்த அச்சுறுத்தல் தொடர்பிலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணை செய்து விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபையின் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி மன்றுக்கு தெரிவித்தார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த திருகோணமலை நீதவான் நீதிமன்றம் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் அவரை ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.