இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 11-06-2025 | 9:58 PM

Colombo (News 1st) ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது. 

குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை​யை நடத்தி பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தரப்பினரையும் அடையாளம் காணல் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடைமுறை அல்லது சட்ட சடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது முதலாவது கோரிக்கையாகும். 

நிறுவன மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசாரணைகளில் வௌிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலப்படுத்தல் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாக அமைந்துள்ளது.

சட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும்போது, ஜனாதிபதி, நீதியமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுக்கு முழு ஆதரவை வழங்க சட்டத்தரணிகள் சங்கம் தயாராக இருப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்டவாட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதி வழங்கும் கட்டமைப்பு நேர்மையுடனும் நியாயத்துடனும் மக்களுக்கு சேவையாற்றுவதை உறுதி செய்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.