செம்மணி அகழ்வுப் பணிகள் சர்வதேச தரங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

by Staff Writer 11-06-2025 | 2:50 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம், செம்மணியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகள் சர்வதேச தரங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

யாழ்.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தமது உத்தியோகப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.

செம்மணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள், பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்கும் முக்கிய படியாக இருக்கலாம் எனவும் இந்த நடவடிக்கையை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த அகழ்வுப் பணிகளை நிறைவு செய்வதற்கு தேவையான நிதி மற்றும் வளங்களை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு அகழ்வுப் பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்பட ​வேண்டியதன் அவசியத்தையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அகழ்வுப் பணியின் முன்னேற்றம், இடைக்கால கண்டுபிடிப்புகள் தொடர்பிலும் தகவல் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த செயன்முறைக்கு இடையே நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் அந்த அமைப்பு பதிவிட்டுள்ளது.

அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.