.webp)
Colombo (News 1st) சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை(11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(10) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு(09) கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கைதிகளை விடுவித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அரசியலமைப்பினூடாக நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
பிரச்சினைக்கு வித்திட்டுள்ள ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள பிரதிவாதி 10 நாட்கள் மாத்திரமே சிறையில் இருந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கூறினார்.
மேற்கோள் ஆரம்பம்
''கௌரவ நீதிபதி அவர்களே! ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 388 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவிருந்தனர். அதில் 36 சிறைக்கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்படவிருந்தனர். எனினும் இந்த பிரதிவாதியின் பெயர் அந்த பட்டியலில் இல்லை. அவ்வாறான பின்புலத்திலேயே பிரதிவாதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். இது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடனேயே நடைபெற்றுள்ளது
''
மேற்கோள் நிறைவு
இந்த சம்பவம் சட்டவாட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
மேற்கோள் ஆரம்பம்
‘’கௌரவ நீதிபதி அவர்களே! இந்த சம்பவத்தினூடாக நீதிமன்றத்தின் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. சட்டவாட்சியின் மீதும் பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனைகளையேனும் கருத்தில் கொள்ளாமல் அரச அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் தனியாக நீதிமன்றமொன்றை ஸ்தாபித்து தமக்கு தேவையானவர்களுக்கு இவர்கள் பொது மன்னிப்பு வழங்கியுள்ளனர். இது ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அல்ல. சிறைச்சாலை ஆணையாளரின் பொது மன்னிப்பாகும்.''
மேற்கோள் நிறைவு
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் செயற்பாட்டுக்கு முரணாக கடந்த வருடம் நத்தார் பண்டிகையின் போது 57 கைதிகளும் இந்த வருடம் சுதந்திர தினத்தன்று 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் தெரிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
''இதுவொரு விரிவான விசாரணையாகும். இது மாற்றப்படவும் முடியும். இந்த அதிகாரிகளுக்கு எதிராக மாத்திரமல்ல இவ்வாறு சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்த்திற்கு புறம்பாக செயற்பட்ட ஒவ்வொரு சிறை கண்காணிப்பாளரும் தற்போது தயாராகிக்கொள்ளுங்கள். நாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று கௌரவ நீதிபதி அவர்களே, சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் போது அவர்களிடமிருந்த பட்டியல் தொடர்பில் வினவினோம். அந்த ஆவணங்கள் ஒரு அரசாங்க நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் திகதிகள் குறிப்பு இலக்கங்கள் எதுவும் இல்லை. ஐந்தாம் தர பிள்ளைகளைப் போன்றே நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறைக்கைதிகள் செயற்படுகின்றனர். கௌரவ நீதிபதி விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகளின் பெயர்ப்பட்டியல் அடங்கிய கடிதம் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளரிடமிருந்து பெறப்படுவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கைதியை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது''
மேற்கோள் நிறைவு
ஜனாதிபதி பொது மன்னிப்புக்கு தகுதியற்றவர்களும் கடந்த வெசாக் தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
''கடந்த வெசாக் தினத்தில் 388 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் பொது மன்னிப்புக்கு தகுதியற்ற சிலரின் பெயர்களும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இவ்வாறான சம்பவங்களே நடைபெற்றன''
மேற்கோள் நிறைவு
அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்த சம்பவம் தொடர்பில் தனது சேவைபெறுநருக்கு எதுவும் தெரியாது எனவும் அவருக்கு பிணை வழங்குமாறும் சந்தேகநபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேற்கோள் ஆரம்பம்
''கௌரவ நீதிபதி அவர்களே! பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளைப் பட்டியலிடும் பிரிவுடன் சந்தேகநபர் தொடர்புபடவில்லை. சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையே அதற்கான காரணமாகும். அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய பெயரிடப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக விடுதலைக்கு தகுதியான கைதிகளை விடுவிக்க முடியும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌரவ நீதிபதி அவர்களே! விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறை கண்காணிப்பாளரே முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே எனது சேவைபெறுநருக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது இதனூடாக வெளிப்படுகிறது. கௌரவ நீதிபதி அவர்களே! இந்த சம்பவத்தில் எனது சேவைபெறுநர் மாத்திரமன்றி நீதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளரையும் சந்தேகநபர்களாக பெயரிட வேண்டும். ஏனெனில் பெயரிடப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதியமைச்சின் செயலாளரினூடாகவே ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்படுகிறது''
மேற்கோள் நிறைவு
சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சந்தேகநபரை நாளை(11) வரை விளக்கமறியலில் வைப்பதாக உத்தரவிட்டார்.