.webp)
Colombo (News 1st) 2014ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதனூடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று(03) திகதியிட்டுள்ளார்.
பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதால் அதற்கான திகதியை வழங்குமாறு வழக்கு இன்று(03) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை மீண்டும் ஆகஸ்ட் 29ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டுள்ளார்.
2014 ஆகஸ்ட் முதலாம் திகதி மற்றும் அந்த வருடத்தின் நவம்பர் முதலாம் திகதிகளுக்கு இடையிலான காலப்பகுதியில் முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ரவிந்திர முனசிங்க ஆகிய பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 70ஆவது சரத்தின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.