.webp)
Colombo (News 1st) வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியமையால் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி R.S.S.சபுவித இன்று(03) திகதியிட்டுள்ளார்.
வழக்கு இன்(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டொ மற்றும் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராகப் பணியாற்றிய மொஹமட் சாகிர் ஆகிய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் மனுதாரர் தரப்பிலான சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 70ஆவது சரத்தின் கீழ் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.