.webp)
Colombo (News 1st) தமிழ் தேசியப் பேரவைக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் யாழ்ப்பாணத்தில் இன்று(02) கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசியப் பேரவையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தமிமீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, சமத்துவ கட்சி ஆகியன அங்கம் வகிக்கின்றன.
இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதும் அரசியல் தீர்வு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய மரபுவழித் தாயகத்தில் ஒரு பூரணமான சமஷ்டி ஆட்சி முறை அரசியல் சாசன ரீதியாக ஏற்படுத்தல்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையாகவும் வலுவானவையாகவும் அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடன் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படுத்தல்
2. அரசியல் யாப்பிற்கான 13ஆவது திருத்தம் என்பது தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல
3. அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்பதனால் அதனை நிராகரித்தல்
4. போரின் போதும் அதற்கு பின்பும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம்
5. தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ் தேசிய சக்திகளுக்கும் நேர்மையாகவும் விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு சாத்தியமான சகல முயற்சிகளும் மேற்கொள்ளுதல்
6. புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமூகத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்
7. தமிழ் மக்களின் முழுமையான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்
8. சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்து சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவை நாடுதல்
உள்ளிட்ட விடயங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.