.webp)
Colombo (News1st) நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் நாட்டின் 21 மாவட்டங்களில் 2,249 குடும்பங்களை சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிராந்தியங்களில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் கடலுக்கு செல்வதை தொடர்ந்தும் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.