.webp)
Colombo (News 1st) கொத்மலை - கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட 19 பேருக்காக தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
பொலிஸார், இலங்கை பேக்குவரத்து சபை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பஸ்ஸில் எவ்வித இயந்திரக் கோளாறும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே கொத்மலை பஸ் விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ருவண் குணசேகர, பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல மற்றும் பொறியியலாளர் கே.கே.காஹிங்கல ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.