.webp)
Colombo (News 1st) சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.
குறித்த அறிக்கையை விரைவாக கையளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் உள்ளிட்ட தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் மாணவர்களுக்கு தற்போது Online ஊடாகவே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கமைய அந்த மாணவருக்கு பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய தேவை இருக்கவில்லை எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளதாகவும் 27ஆம் திகதி பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்திற்குள் தங்குமிட வசதி வழங்கப்படாவிட்டாலும் அவர் மூன்றாமாண்டு மாணவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே, குறித்த திடீர் மரணம் பகிடிவதை காரணமாக இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவரொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பகிடிவதை குற்றவியல் குற்றம் என்பதால் அவ்வாறான விடயம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படுமாயின் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.