.webp)
Colombo (News 1st) தபால் ஊழியர்கள் நேற்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இடையூறுகள் காணப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தபால்மா அதிபர் ருவன் சத்குமாரவிடம் வினவியபோது, ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என தபால்மா அதிபர் கூறினார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் இணைத் தவிசாளர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டார்.
சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 43ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனிடையே, பல கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அனுமதி வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹேமச்சந்திர குணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கிராமிய வீதி மற்றும் பாலங்களின் நிர்மாணப்பணிகள் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்க நில அளவையாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் உரித்து காணி உறுதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென அதன் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.