மியன்மாரில் கைதான இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் கைதான 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு

by Staff Writer 17-04-2024 | 1:51 PM

Colombo (News 1st) மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பொது மன்னிப்பு தினத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் கடந்த டிசம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மியன்மார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையில் அந்நாட்டு பிரதமர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.