உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி

by Bella Dalima 17-04-2024 | 7:06 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை உருவாக்கி இனவாதக் கலவரங்களை ஏற்படுத்தி, உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை ஏற்படுத்தி, குறுகிய அரசியல் இலக்கை அடைவதற்காக குழுவொன்று மேற்கொண்ட ஓர் சதி என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி மற்றும் தாக்குதலை திட்டமிட்டவர்களை சட்டத்திற்கு முன்னால் நிறுத்துவதே தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை நடவடிக்கை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக உறுதிமொழி வழங்கும் வகையில். இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. 

தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்கவின் கையொப்பத்துடன் இந்த உறுதி மொழி இன்று வெளியிடப்பட்டது.

முழுமையான நீதிமன்ற அதிகாரத்துடன், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் தாக்குதலை நடத்துவதற்கு சூழ்ச்சி செய்தோர் மற்றும் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவும்  பின்வாங்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தேசிய மக்கள் சக்தி இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தமது உறுதிமொழி தொடர்பில் தெளிவுபடுத்தியது.