Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டுக் குற்றச்சாட்டிற்காக ஒரு வருட சிறைத்தண்டனை பெற்று வந்த கைதியும், விளக்கமறியல் கைதி ஒருவருமே இன்று காலை தப்பியோடினர்.
உடனடியாக செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார், 30 நிமிடங்களுக்குள் இருவரையும் கைது செய்து மீண்டும் மன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, தப்பியோடிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 6 மாத சாதரண சிறைத்தண்டனையும், தலா 1500 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக மேலுமொரு மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் A.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.