மண்டைதீவு பொலிஸ் காவலரண் அருகில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

by Bella Dalima 11-01-2024 | 7:03 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மண்டைதீவில் பொலிஸ் காவலரண் அருகில் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இதனால் காவலரணுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறினர்.

நேற்றிரவு 04 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன், அதில் ஒன்று வீதியிலும் ஏனைய மூன்று குண்டுகள் பொலிஸ் காவலரண் மீதும்  வீழ்ந்துள்ளன.

மண்டைதீவு பகுதியில் நேற்றிரவு வீதித்தடை போடப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பொலிஸ் காவலரண் அமைந்துள்ள பகுதியில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று மாத்திரமே தீப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய நால்வர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்றைய தினம் யுக்திய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 28 வயது சந்தேகநபரின்  சகோதரர் மற்றும் அவரின் குழுவினரே பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.