சென்னையில் வடிந்தோடி வரும் வௌ்ள நீர்

மிக்ஜாம் சூறாவளி: சென்னையில் வடிந்தோடி வரும் வௌ்ள நீர், மீட்புப் பணியில் 75,000 பேர்

by Bella Dalima 06-12-2023 | 3:46 PM

Chennai: மிக்ஜாம் சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் வௌ்ள நீர் வடிந்தோடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். 

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் 4% பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுமார் 75,000 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெள்ள சேதங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னையில் 4 பேரும் செங்கல்பட்டில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 311 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 378 குடியிருப்புகள் முழுமையாகவும் 35 குடியிருப்புகள் பகுதியளவிலும் 88 வீடுகள் லேசாகவும் சேதமடைந்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்க மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை (7 ) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.  

 

ஏனைய செய்திகள்