அலுவலக ரயில் சேவைகள் இரத்து; பயணிகள் அசௌகரியம்

by Bella Dalima 04-10-2023 | 6:25 PM

Colombo (News 1st) இன்று (04)  மாலை முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் இரத்து செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பே இதற்கான காரணமாகும்.

பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது இன்று காலை தாக்குதல் நடத்தியமையினால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார். 

இதன் காரணமாக அனைத்து ரயில்வே பராமரிப்பு பிரிவுகளில் இருந்தும் ரயில்கள் வௌியேறுகின்றமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதுடன், சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதனிடையே, கொழும்பு - கோட்டை ரயில் நிலைய பாதுகாப்பிற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.