.webp)
Colombo (News 1st) யாழ். நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த 13 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்களின் மூன்று விசைப்படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் J.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் நிபந்தனையுடன் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், உரிமை கோரிக்கை வழக்கின் பின்னர் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க இன்று மன்றில் தீர்மானிக்கப்பட்டதாக நீரியல் வள திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.