சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; களுபோவில போதனா வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு

by Bella Dalima 23-09-2023 | 6:04 PM

Colombo (News 1st) களுபோவில போதனா வைத்தியசாலையின் சிசு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்  வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று கடந்த  18 ஆம்  திகதி இறந்ததாக அறிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை மற்றைய குழந்தையும் உயிரிழந்துள்ளது. 

கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த குழந்தையின் மரணத்திற்கு சுவாசக்கோளாறே காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பெற்றோர் குறிப்பிட்டனர். 

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில்  களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிரஞ்சன் பாலகிருஷ்ணனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் குழந்தையின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அதனை சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக  பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டார்.