வவுனியா இரட்டைக்கொலை: ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், மூவருக்கு பகிரங்க பிடியாணை

வவுனியா இரட்டைக்கொலை: ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், மூவருக்கு பகிரங்க பிடியாணை

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2023 | 5:42 pm

Colombo (News 1st) வவுனியா இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 06 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.  

இந்த நிலையில், மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால், அவர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

குறித்த மூவரும் தலைமறைவாகியுள்ளதால், அவர்களை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவை வவுனியா நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன், வழக்கை அடுத்த மாதம் 05 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்