விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பிய பிரக்யான்

விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பிய பிரக்யான் ரோவர்; நிலவில் கந்தகம் இருப்பதையும் உறுதி செய்துள்ளது

by Bella Dalima 30-08-2023 | 3:49 PM

Colombo (News 1st) பூமியில் இருந்து நிலவிற்கு தன்னை சுமந்து சென்ற விக்ரம் லேண்டரை (Vikram Lander) படம் பிடித்து ISRO விண்வௌி ஆய்வு மையத்திற்கு பிரக்யான் ரோவர் (Pragyan Rover) அனுப்பி வைத்துள்ளது. 

அந்த புகைப்படத்தை Smile Please என தலைப்பிட்டு, ட்விட்டரில்  ISRO பகிர்ந்துள்ளது. 

அதில், விக்ரம் லேண்டரை இன்று காலை பிரக்யான் ரோவர் படம் பிடித்துள்ளது. ரோவரில் அமைந்துள்ள நேவிகேஷன் கெமராவின் (Navigation Camera) மூலம் இந்த மிக அற்புதமான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த நேவிகேஷன் கேமராவானது எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (Electro-Optics Systems - LEOS) ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் கந்தகம் (Sulfur) இருப்பதை சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் ISRO நேற்று (29) அறிவித்திருந்தது.

நிலவின் தென் துருவத்தில் ‘பிரக்யான்’ ரோவா் நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வுகளை தொடர்ந்தும் நடத்தி வருகிறது.
 
கந்தகம் மட்டுமின்றி எதிா்பாா்த்தப்படியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, க்ரோமியம், டைடேனியம், மங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஒக்சிஜன் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. 

ஆய்வுத் திட்டத்தின் முக்கிய இலக்கான ஹைட்ரஜன் தேடல் நடந்து வருகிறது.