காணிப் பிரச்சினை, கைதிகள் விடுதலை, அதிகார பரவலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு

by Bella Dalima 09-06-2023 | 6:54 PM

Colombo (News 1st) நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகார பரவலாக்கம்  போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் - தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல் - இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இழப்பீடுகளுக்கான அலுவலகம் ,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல், அது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்  இந்த  விடயங்கள்  தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறை , இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல், மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணல் போன்றவை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  குறிப்பிட்டுள்ளது. 

கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்  சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் மற்றும் தொடர்புடைய நிறுவன பிரதானிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.  

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் செயலாளர்கள், கிழக்கு மற்றும் வட மாகாண காணி ஆணையாளர்கள் ஆகியோர் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டிருந்தனர்.