உக்ரைனின் கக்கோவ்கா அணை தகர்ப்பு

உக்ரைனின் கக்கோவ்கா அணை தகர்ப்பால் வௌ்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; மக்கள் பரிதவிப்பு

by Bella Dalima 07-06-2023 | 3:29 PM

Ukraine: உக்ரைனின் டினிப்ரோ (Dnipro) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை தகர்க்கப்பட்டமையானது ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த குறித்த அணையின் ஒரு பகுதியை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால், உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956 ஆம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கிலோமீட்டர் நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர் மின் நிலையமும் உள்ளது. கக்கோவ்கா அணை சோவியத் காலத்தில் கட்டப்பட்டது.  

அணையை யார் தாக்கியது என்ற தகவல் உறுதியாகவில்லை.  ரஷ்யா - உக்ரைன் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வௌ்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வௌியேறியுள்ளதாகவும் நீர்மட்டம் மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும்  ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார். 

அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் புகுந்துள்ளது. 

பல அடி உயரத்திற்கு சென்ற வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.  
 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்த பலரை படகில் சென்று மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 

இந்நிலையில், அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.