மட்டக்களப்பில் கழிவறைகள் நிர்மாணிக்கும் திட்டம்

மட்டக்களப்பில் கழிவறைகள் நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

by Bella Dalima 06-06-2023 | 4:44 PM

Colombo (News 1st) மட்டக்களப்பில் கழிவறைகள் நிர்மாணிப்பதற்கான இந்திய நன்கொடைத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த திட்டம் தொடர்பிலான திட்ட வழிநடத்தல் குழுவின் சந்திப்பொன்று நேற்று (05) இடம்பெற்றிருந்தது. 

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் விநோத் K. ஜேக்கப் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகளும் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். 

இதன்போது, பிராந்தியத்தில் உள்ள மக்களின் சுகாதார நிலைமையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன், 1000-க்கும் அதிகமான கழிவறைகளை விரைவாக நிர்மாணிப்பதற்கான முறைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. 

கிழக்கு மாகாண மக்களை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பிரதிபலிப்பாக, இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவினால் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அபிவிருத்தி உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், நாட்டின் 25 மாவட்டங்களிலும் நன்கொடை அடிப்படையிலான 65  அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இருபதுக்கும் அதிகமான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், அவை பல்வேறு நிலைகளில் உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

விசேடமாக இந்திய வீடமைப்பு திட்டம் மற்றும் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை ஆகியன இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நன்கொடை திட்டங்களில் முதன்மையானவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.