சமந்த பிரீத்தி குமார ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாக நீதிமன்றம் தீர்மானம்

by Bella Dalima 06-06-2023 | 7:09 PM

Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

எனவே, இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த பிரீத்தி குமார, நாரஹேன்பிட்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து நண்பருடன் மதிய உணவிற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்தார்.

அவரது நண்பர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​சமந்த பிரீத்தி குமார மட்டும் தான் வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஜீப்பில் வந்த சிலர் அவரை அழைத்துச்சென்றிருந்தனர்.

பின்னர் சமந்த பிரீத்தி குமாரவின் சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான விசாரணையின் போது, ​​அந்த வலையமைப்பில் உயர் பதவி வகித்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சமந்த பிரீத்தி குமார கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இது தொடர்பாக நாம் வினவிய போது, ​​தெரிவித்தார்.

அவருக்கு மேலாக, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் உள்ளவர்கள் தொடர்பில் வினவியபோது, போத்தல் ஒன்றை இரண்டாக உடைத்து சந்தேகநபர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

எவ்வாறாயினும், அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளமை நீதிமன்றில் இன்று தெரியவந்தது.